கீழக்கரை: கீழக்கரையில் திறந்து கிடக்கும் கால்வாயை மூட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழக்கரை மேலத்தெரு பகுதியில் ஒருபுறத்தில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியும், மறுபுறத்தில் மெட்ரிக் மேல்நிலை பள்ளியும் உள்ளன. பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பிடத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு இருப்பதால் வெளியே செல்ல முடியாமல் பள்ளிக்குள்ளேயே திரும்பி வந்துவிடுகிறது. இது குறித்து பள்ளியின் நிர்வாகம் நகராட்சியில் கடந்த ஒரு வாரமாக புகார் செய்த நிலையில், நகராட்சி ஊழியர்கள் வந்து கால்வாய்களை மூன்று இடங்களில் மூடியை திறந்து வைத்து அடைப்பை எடுக்காமல் அப்படியே விட்டு சென்றுள்ளனர். இதனால் இப்பகுதியில் பள்ளி வாகனங்கள் மற்றும் பள்ளி மாணவிகள் அச்சத்துடன் செல்கின்றனர். மேலும் இப்பகுதி செய்யது முகம்மது அப்பா தர்கா, சின்னமாயாகுளம், பாரதி நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் வழியாக இருப்பதால் இப்பகுதியில் அதிகளவு வாகன போக்குவரத்து இருக்கிறது. இரவு நேரத்தில் இப்பகுதியில் செல்லும் வாகனங்கள் தவறி கால்வாயில் விழுந்தால் கடுமையான காயம் ஏற்படும் ஆபத்து நிலவுகிறது. ஆகவே இந்த கால்வாய்களை நகராட்சி நிர்வாகம் உடனடியாக சீர்செய்து மூட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….