காங்கயம் : காங்கயம் அருகே, சிவன்மலை முருகன் கோயில் அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மறியலில் ஈடுபட்ட பாஜ உள்ளிட்ட இந்து அமைப்பினர் 38 பேர் கைது செய்யப்பட்டனர்.காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி மலைக் கோயில் உள்ளது. இக்கோயிலின் அடிவாரத்தில் உள்ள கிரிவலப் பாதையில் கோயிலுக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் உள்ளன. மலைக் கோயிலைச் சுற்றி தனியாரின் பங்களிப்புடன் கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் மற்றொரு புறத்தில் உள்ள கோயில் நிலங்களைப் பாதுகாப்பதற்காக கம்பிவேலி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதுகடந்த சில மாதங்களாக இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான மேற்கண்ட இடத்தில், ஒரு முள்வேலி மரத்தின் கீழ் 3 வேல்களை நட்டு வைத்து, சிலர் வழிபட்டு வந்தனர். இந்த நிலையில், அந்த 3 வேல்களையும் திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள் என சம்மந்தப்பட்ட பக்தர்களிடம் கோயில் நிர்வாகம் தரப்பில் கூறியதாகத் தெரிகிறது. ஆனாலும், மேற்கண்ட வேல்கள் அகற்றப்படவில்லை.இதையடுத்து, சிவன்மலை கோயில் நிர்வாகம் சார்பில் 2 தினங்களுக்கு முன்பு அந்த வேல்கள் அகற்றப்பட்டதோடு, அந்த முள்வேலி மரமும் வெட்டி, அப்புறப்படுத்தப்பட்டது. இந்நிலையில், பிடுங்கப்பட்ட வேல்களை திரும்பவும் அதே இடத்தில் நட்டு வைத்து, வழிபட அனுமதிக்க வலியுறுத்தி, பாஜ திருப்பூர் மாவட்ட பொதுச் செயலர் கோபாலகிருஷ்ணன், நகரச் செயலர் கலா நடராஜன், இந்து முன்னணி அமைப்பின் மாவட்டத் தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்ட இந்து அமைப்புகள், பக்தர்கள் என 50-க்கும் மேற்பட்டோர்நேற்று காலை 10 மணியளவில், கிரிவலப் பாதை சாலையில் அமர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பளார் சசாந்த் சாய், தாராபுரம் உதவி ஆட்சியர் ஆனந்த் மோகன், காங்கயம் தாசில்தார் சிவகாமி, காங்கயம் டி.எஸ்.பி., குமரேசன் உள்ளிட்டோர் மறியல் செய்தவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில், பிடுங்கப்பட்ட இடத்தில் 3 வேல்களையும் திரும்ப நட்டு வைத்தால்தான், சாலை மறியலைக் கைவிடுவோம் எனத் தெரிவித்ததையடுத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1 பெண் உள்பட 38 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் காங்கயம், கரூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்….