டெல்லி : இந்தியாவில் பரவி வரும் கொரோனாவால் ஒரே நாளில் 4,435 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 163 நாட்களுக்கு பிறகு முதன்முறையாக தினசரி பாதிப்பு 4,000ஐ கடந்துள்ளது. ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. காலை 8 மணி நேர நிலவரப்படி, நாட்டில் ஒரே நாளில் 4,435 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 21,179ல் இருந்து 23,091 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15பேர் உயிரிழந்ததையடுத்து ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,30,916-ஐ தொட்டுள்ளது. மகாராஷ்டிரா, கேரளாவில் தலா நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன; சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் ராஜஸ்தானில் தலா ஒரு இறப்பு பதிவாகியுள்ளது.இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து 4,41,79,712 பேர் வீடு திரும்பி உள்ளனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.05% ஆகவும் குணமடைந்தோர் விகிதம் 98.76% ஆகவும், இறப்பு விகிதம் 1.195 ஆகவும் உள்ளது. 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் இதுவரை போடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.