சிதம்பரம்: சிதம்பரம் அருகே 9 வகுப்பு மாணவி கர்ப்பமான சம்பவத்தில் காதலன் பெயரை சொல்ல மறுப்பதால் அடையாளம் தெரியாத வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கு செல்லும்போது சிறுமியுடன் வாலிபர் ஒருவர் பழகி வந்துள்ளார். மேலும் சிறுமியை அந்த வாலிபர் அவ்வப்போது சிதம்பரம் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சிறுமி வீட்டில் இருந்தபோது திடீரென வயிற்று வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை அழைத்து சென்று அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு மருத்துவர்கள் சோதனை செய்ததில், சிறுமி இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் மகளிர் போலீசார், அந்த சிறுமியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது காதலன் பெயரை சொல்ல சிறுமி மறுத்து வருவதாக தெரிகிறது. இதனால் போலீசார் இந்த வாலிபரை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதையடுத்து அடையாளம் தெரியாத வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.