9 மாணவிக்கு பாலியல் தொல்லை அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்: உடந்தையாக இருந்த 4 ஆசிரியைகளிடம் விசாரணை

மேட்டுப்பாளையம்: கோவை அருகே 9 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த 4 ஆசிரியைகளிடம் விசாரணை நடக்கிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த ஆலங்கொம்பு அரசுப்பள்ளியில் 7, 8, 9ம் வகுப்புகளில் பயிலும் மாணவிகள் 9 பேரை அப்பள்ளியின் இடைநிலை ஆசிரியர் நடராஜன் (54), பாலியல் ரீதியில் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகள் புகாரளித்தும் தலைமை ஆசிரியை ஜமுனா, ஆசிரியைகள் சண்முகவடிவு, கீதா, ஷியாமளா உள்ளிட்டோர் கண்டுகொள்ளாமல் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்ஷா அளித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கு பதிந்து இடைநிலை ஆசிரியர் நடராஜனை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். மேலும், உடந்தையாக இருந்த 4 ஆசிரியைகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், ‘‘மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நடராஜன் ஒரு வாரத்திற்கு முன்னரே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்தே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 4 ஆசிரியைகள் மீது தொடர்ந்து விசாரணை நடக்கிறது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

* பள்ளி மாணவனுக்கு செக்ஸ் டார்ச்சர் வார்டன் கைது
தேனி மாவட்டம், வருசநாடு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இதற்காக கிராமத்தில் உள்ள அரசு மாணவர் விடுதியில் தங்கியுள்ளார். இந்த மாணவனுக்கு, விடுதி காப்பாளர் ராமச்சந்திரன்(45), அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவனின் தந்தை மயிலாடும்பாறை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில், விடுதி காப்பாளர் ராமச்சந்திரன், மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து, ராமச்சந்திரனை நேற்று கைது செய்து நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது, அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்