சென்னை: தமிழ்நாடு முழுவதும் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 80 ஆயிரம் விநாயகர் சிலைகள் இன்று பிரதிஷ்டை செய்ய காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 80 ஆயிரம் விநாயகர் சிலைகள் அமைத்து பிரதிஷ்டை செய்ய காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவுப்படி சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அனைத்து ஐஜிக்கள், டிஐஜிக்கள், மாநகர கமிஷனர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த உறுதி செய்ய வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மாநிலம் முழுவதும் 80 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை பெருநகர காவல்துறை கமிஷனர் அருண் கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட 1,519 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கியுள்ளார். மேலும், விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணித்தும், பைக் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மூலம் அவ்வபோது போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். சிலைகள் அமைத்துள்ள இடங்களில் சிசிடிவி கமேராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் அமைதியான முறையில் வழிபாடுகள் செய்யவும், பொது இடங்களில் முறையான அனுமதியுடன் வைக்கப்பட உள்ள விநாயகர் சிலைகளை, காவல்துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடிக்க ேவண்டும் என்றும் சிலை அமைப்பாளர்களிடம் அறிவுரை வழங்கியுள்ளார்.
அதேபோல், ஆவடி மாநகர காவல் சரகத்தில் 503 சிலைகளும், தாம்பரம் மாநகர காவல் சரகத்தில் 699 சிலைகளும் சென்னை பெருநகர காவல் சரகத்தில் 1,519 சிலைகைள் என மொத்தம் 2,721 சிலைகள் வைத்து வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை பெருநகர காவல் எல்லையில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் 1,519 இடங்களில் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் வழிபாடுகள் மேற்கொள்ள 10 ஆயிரம் போலீசார் மற்றும் 2 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், ஆவடி மாநகர காவல் எல்லையில் 3,500 போலீசார் மற்றும் 300 ஊர்க்காவல் படையினரும், தாம்பரம் மாநகர காவல் எல்லையில் 3,300 காவலர்கள் மற்றும் 350 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 16,800 போலீசார் மற்றும் 2,650 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.