சேலம், ஜூலை 23: சேலம் ரயில் நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு 8.5கிலோ கஞ்சாவை கடத்தியவர் கைது செய்யப்பட்டார். ஒடிசா, ஆந்திராவில் இருந்து சேலம் வழியே கேரளா செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க ரயில்வே போலீசார் தொடர்ந்து ரயில்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சேலம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும், போதை பொருள் தடுப்புபிரிவு போலீசாரும் இணைந்து நேற்று காலை சேலம் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, 3வது நடைமேடையில் சந்தேகம்படும்படி நடந்து வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரது பையில் 8.5 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. அவரிடம் விசாரித்தனர். அதில், அவர் கேரளா மாநிலம் பத்தினம்திட்டா பகுதியைசேர்ந்த தம்பி(53) என்பது தெரிந்தது. இவர் ஓடிசாவில் இருந்து கஞ்சாவை வாங்கி ரயிலில் கடத்தி வந்தது விசாரணையில் அம்பலமானது. அவர் கேரளாவுக்கு கஞ்சாவை கடத்திச்செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ₹8.5லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, சேலம் வழியே செல்லும் ரயில்களில் போலீசார் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.