சென்னை, செப்.30: சென்னையில் இருக்கக்கூடிய தெரு விளக்குகளின் உயரங்களை குறைக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மழை காலங்களில் மின்விளக்குகளில் ஏற்படும் சேதம் மற்றும் மின் தடை பிரச்னை ஏற்பட்டால் அதனை எளிதில் கையாள தற்போது 8 மீட்டராக உள்ள மின்விளக்கு கம்பங்களின் உயரத்தை 5 மீட்டராக குறைக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல, மின்விளக்குகளின் உயரம் குறைப்படுவதால் 110 வாட்களிலிருந்து 90 வாட் தெரு விளக்குகள் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, உயரம் குறைப்படுவதால் அதிகப்படியான வெளிச்சம் சாலைகளில் வீசும்பட்சத்தில் வாகனம் ஓட்டுவதில் எந்த ஒரு இடர்பாடும் ஏற்படாது என்றும், மேலும், மின்சாரத்தை சேமிக்கும் 2.86 லட்சம் எல்.இ.டி விளக்குகள் மாநகராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மின் விளக்குகளில் இருந்து வரக்கூடிய வெளிச்சத்தை மரக்கிளைகள் மறைப்பதால், வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் சிரமம் ஏற்படுவதை தடுக்கும் வண்ணம் மரக்கிளைகள் அகற்றம் செய்யப்பட்டு வருகின்றன. மரங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மின் விளக்குகளின் உயரம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.