சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று முதல் சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு: பயணிகளின் உடைமைகள் துருவித் துருவி சோதனை

மீனம்பாக்கம்: இந்தியாவின் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு அமலுக்கு வந்தது. இதனால் உள்நாட்டு பயணிகள் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாகவும், சர்வதேச விமானப் பயணிகள் மூன்றரை மணி நேரத்துக்கு முன்பாக வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அனைத்து பகுதிகளிலும் மோப்ப நாயுடன் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்தியாவின் 78வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இக்கொண்டாட்டங்களை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், பேருந்து, ரயில் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடுமிடங்கள் போன்ற பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் இன்று முதல் உச்சகட்டமாக 7 அடுக்கு பாதுகாப்பு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2 மாதங்களில் சென்னை விமானநிலையத்தில் 10 முறை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததைத் தொடர்ந்து, ஏற்கெனவே அங்கு 5 அடுக்கு பாதுகாப்பு இருந்து வருகிறது. இப்பாதுகாப்பு வரும் 20ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடாக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை விமானநிலையத்தின் வெளிவட்ட பகுதியில் மாநகர போலீசாரும், உள்வட்ட பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு, தீவிர சோதனைகள் நடந்து வருகின்றன. விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களை பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்தி, சந்தேகப்படும் வாகனங்களை மோப்ப நாய் உதவியுடன் பாதுகாப்பு படையினா் சோதனையிடுகின்றனா். அதேபோல், மெட்டல் டிடெக்டா்கள் மூலம் வெடிகுண்டு நிபுணா்கள் பரிசோதிக்கின்றனா். விமானநிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அதிரடி வீரர்கள் மோப்ப நாய்களுடன், சென்னை விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளுக்கும், குறிப்பாக விமானங்கள் நிற்கும் பகுதிகளில் தீவிரமாக சோதனையிட்டு கண்காணித்து வருகின்றனர். சென்னை விமானநிலையத்தில் ஏற்கெனவே பார்வையாளர்களுக்கு தடை அமலில் இருந்து வருகிறது. மேலும், முக்கிய பிரமுகர்களை வரவேற்க வருபவர்களுக்கு வழங்கப்படும் பிசிஏஎஸ் பாஸ்களிலும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

அங்கு ஏற்கனவே உள்ள சிசிடிவி காமிராக்களுடன் தற்போது கூடுதலாக அமைத்து, விமானநிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் தொடா்ந்து கண்காணிக்கின்றனா். அதேபோல் விமான பயணிகளுக்கும் பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன், மேலும் ஒருமுறை விமானங்களில் ஏறும் இடத்தில் பாதுகாப்பு சோதனை நடத்தப்படுகிறது. குறிப்பாக, பயணிகள் எடுத்து வரும் கைப்பைகளை துருவித் துருவி சோதனை செய்யப்படுகிறது. பயணிகள் திரவப்பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விமானங்களில் பாா்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து, அனைத்து பாா்சல்களையும் பலகட்ட சோதனைக்குப் பின்பே ஏற்ற அனுமதிக்கப்படுகின்றனா். விமான பயணிகளுக்கு கூடுதல் சோதனைகள் நடத்தப்படுவதால், உள்நாட்டு பயணிகள் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாகவும், சர்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்துக்கு முன்னதாகவும் சென்னை விமானநிலையத்துக்கு வரவேண்டும் என்று விமானநிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். இதன்மூலம் சென்னை விமான நிலையம் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த 7 அடுக்கு பாதுகாப்பு, வரும் ஆகஸ்ட் 20ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Related posts

பழனி பஞ்சாமிர்த டப்பாக்களில் காலாவதி தேதி 15 நாட்களில் இருந்து 30 நாட்களாக உயர்வு

கூல் லிப் பயன்பாடு: 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

பழனி பஞ்சாமிர்தம் காலாவதி தேதி 30 நாட்களாக உயர்வு..!!