79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எனும் டான்ஜெட்கோ நிறுவனத்தை, தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் என இரண்டாக பிரித்து கடந்த ஜனவரி 24ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த இரு நிறுவனங்களுக்கு அதிகாரிகள், ஊழியர்களை இடமாற்றம் செய்வது தொடர்பாக, கடந்த பிப்ரவரி 12ம் தேதி அரசு, டான்ஜெட்கோ மற்றும் தொழிற்சங்கங்கள் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தானது. அதன்படி, 79 பேரை இடமாற்றம் செய்து கடந்த ஜூன் 29ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து தமிழ்நாடு மின்சார வாரிய கணக்காயர் மற்றும் களத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சங்கம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலன், தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், டான்ஜெட்கோ தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகினர். அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டான்ஜெட்கோவில் பணியாற்றும் நிலையில், 79 பேர் மட்டும் இடமாற்றம் செய்யப்படுவதாகவும், இடமாற்றம் செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும், முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், அது மனுதாரர் சங்கத்தை கட்டுப்படுத்தும் என கூறி, வழக்கை தள்ளுபடி செய்தார்.

Related posts

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!

MSME தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்