பாகூர் : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இதனால் புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு மது, சாராயம் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கிருமாம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பரிக்கல்பட்டு-முள்ளோடை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தனியார் மதுக்கடை அருகே சந்தேகமான முறையில் 6 அட்டை பெட்டியுடன் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
போலீசார் வருவதை கண்ட அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். சந்தேகமடைந்த போலீசார் வாலிபர் வைத்திருந்த அட்டை பெட்டியை சோதனை செய்ததில் 650 மில்லி அளவு கொண்ட 72 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கலால்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய வாலிபர் யார், எந்த ஊர் பகுதியை சேர்ந்தவர், அவர் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை தமிழக பகுதிக்கு கடத்த முயன்றாரா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். மேலும் அங்குள்ள சிசிடிவி காட்சிகள் வைத்தும் ஆய்வு செய்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு சுமார் 10,000 ஆகும்.