இந்தூர்: காங்கிரஸ் தனது 70 ஆண்டு ஆட்சியில் ஏழைகளுக்கு எதுவும் செய்யவில்லை என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டினார்.மபியில் இந்தாண்டு இறுதியில் சட்ட பேரவை தேர்தல் நடக்க உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு பாஜ பிரசாரத்தை துவக்கி உள்ளது. இந்தூரில் பாஜ தொண்டர்கள் கூட்டம் நேற்று நடந்தது.
இதில்,ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசுகையில்,‘‘நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். இதில், மபியில் கட்சி அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது. 2024ம் ஆண்டு தேர்தலில் மபியில் 29 இடங்களும் மோடிக்கு கிடைக்க வேண்டும். வரும் சட்ட பேரவை தேர்தலில் பாஜ மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும். ஏழைகளை காக்க வந்தவர் மோடி. அவர்களுக்காக ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். காங்கிரஸ் தனது 70 ஆண்டு ஆட்சியில் ஏழைகளுக்கு எதுவுமே செய்யவில்லை’’ என்றார்.