70வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில். ‘திருச்சிற்றம்பலம்’ என்ற படத்தில் நடித்திருந்த நித்யா மேனன் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் பிரமாண்டமான முறையில் தயாரித்த இப்படத்தில் தனுஷ் நடித்திருந்தார். நித்யா மேனனுடன், ‘கட்ச் எக்ஸ்பிரஸ்’ என்ற குஜராத்தி படத்தில் நடித்த மானசி பரேக், சிறந்த நடிகைக்கான விருதைப் பகிர்ந்துகொண்டார். சிறந்த நடிகராக ‘காந்தாரா’ என்ற படத்தில் நடித்திருந்த ரிஷப் ஷெட்டி தேர்வு செய்யப்பட்டார். ‘திருச்சிற்றம்பலம்’ என்ற படத்தில் இடம்பெற்றிருந்த ‘மேகம் கருக்காதா…’ என்ற பாடலுக்காக, சிறந்த நடன இயக்குனருக்கான விருது சதீஷ் கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.
‘பொன்னியின் செல்வன் 1’ என்ற படத்துக்காக சிறந்த பின்னணி இசை விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், சிறந்த ஒளிப்பதிவாளர் விருது ரவிவர்மனுக்கும், சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருது ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கும் அளிக்கப்பட்டுள்ளது. ‘சவுதி வெள்ளக்கா’ என்ற மலையாளப் படத்தில் பாடிய பாம்பே ஜெய, சிறந்த பின்னணி பாடகிக்கான விருது பெற்றார். சிறந்த பாடகருக்கான விருதை ‘பிரம்மாஸ்திரா 1’ என்ற இந்திப் படத்தில் பாடிய அர்ஜித் சிங் பெற்றார். இதே படத்தில் பணியாற்றிய பிரீத்தம், சிறந்த பாடல்களுக்கான இசை அமைப்பாளர் விருது பெற்றார். தேசிய விருது பட்டியலில் பாலிவுட்டில் இருந்து ஒரு படம் மட்டுமே தேர்வானது. ‘ஊஞ்சாய்’ என்ற படத்தை இயக்கிய சூரஜ் ஆர்.பர்ஜாத்யா, சிறந்த இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார். இப்படத்தில் நடித்திருக்கும் நீனா குப்தா, தனது 65வது வயதில் சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றுள்ளார். சிறந்த தெலுங்கு திரைப்படமாக ‘கார்த்திகேயா 2’, சிறந்த கன்னடப் படமாக ‘கேஜிஎஃப் 2’ தேர்வாகியுள்ளன. இப்படங்களில் பணியாற்றிய இரட்டையர்கள் அன்பறிவ், சிறந்த ஸ்டண்ட் இயக்குனர்களாக தேர்வாகியுள்ளனர்.