வேலூர், அக்.9: வேலூரில் பாட்டி வீட்டுக்கு வந்த 7 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட எலக்ட்ரீசியனை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். வேலூர் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்தவர் 7 வயது சிறுமி. 2ம் வகுப்பு மாணவியான இவர் பலவன்சாத்துகுப்பம் பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கும் பாட்டி வீட்டுக்கு கடந்த மாதம் 18ம் தேதி சென்றிருந்தார். அன்றிரவு அங்கு தங்கியிருந்த சிறுமியை மறுநாள் காலையில் அவரது பெற்றோர் தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அப்போது சிறுமி தனக்கு வயிறு வலிப்பதாக கூறி கதறி அழுதார். இதனால் சிறுமியிடம் கேட்டபோது பாட்டி வீட்டுக்கு சென்றிருந்தபோது அந்த வீட்டின் உரிமையாளரான எலக்ட்ரிஷீயன் மணிகண்டன்(45) என்பவர் தனியாக அழைத்து சென்று ஒரு அறையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதைத்தொடர்ந்து மணிகண்டனை போலீசார் நேற்று காலை கைது செய்தனர்.