திருவண்ணாமலை, செப்.25: திருவண்ணாமலை அருகே அருகே 7ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை அருகே உள்ள மங்கலம் அடுத்த மன்சுராபாத் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் சரவணன்(38). கட்டுமான பணி கூலித்தொழிலாளி. திருமணமானவர். இவர், 7ம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி கடந்த 22ம் தேதி பள்ளிக்கு செல்லும்போது வழிமறித்துள்ளார். பின்னர், காதலிப்பதாக கூறி கையை பிடித்த இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றுள்ளார். அதனால், அதிர்ச்சியடைந்த சிறுமி, அங்கிருந்து தப்பி வந்துள்ளார். இதுகுறித்து, தனது பெற்றோரிடம் கண்ணீருடன் சிறுமி தெரிவித்துள்ளார். பள்ளிக்கு செல்ல அச்சமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். அதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது தொடர்பாக திருவண்ணாமலை மகளிர் போலீசில் நேற்று புகார் அளித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் சரவணனை நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.