புதுடெல்லி: சிபிஎஸ்இ பள்ளிகளில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை என்சிஇஆர்டி எனப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வடிவமைத்து வருகிறது.இதனால் புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில், ‘‘திறமையற்ற தேசிய தேர்வு ஆணையத்தின் மூலமாக தேர்வு செயல்முறையை நாசமாக்கிய உயிரியல் அல்லாத பிரதமர் மோடியின் கல்வி துறை அமைச்சகம் குழந்தைகளின் கல்வியை நாசப்படுத்துகிறது. பள்ளி ஆண்டு தொடங்கியுள்ள நிலையில் 6ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகங்களை வெளியிடுவதற்கு என்சிஇஆர்டி தவறிவிட்டது. மாணவர்களுக்கு புத்தகங்கள் கிடைப்பதற்கு சுமார் 2 மாதங்கள் ஆகலாம் என அதிகாரிகள் கூறுகிறார்கள். திறமையின்மை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.