செட்டிகுளத்தில் விவசாயி வீட்டில் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருட்டு!

பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே விவசாயி வீட்டில் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அங்கமுத்து மகன் துரைராஜ் (70). விவசாயி இவர், நேற்று தனது விவசாய நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயத்திற்கு மருந்து அடிக்கும் பணிக்காக வீட்டை பூட்டிக்கொண்டு மனைவியுடன் சென்றார்.

விவசாய பணி முடிந்து இரவு 8 மணியளவில் வீடு திரும்பினர். அப்போது, வீட்டுக்கு வந்து போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 6 பவுன் தங்க நகை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து துரைராஜ் பாடாலூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். செட்டிகுளத்தில் வீட்டு பூட்டை உடைத்து தங்க நகை, கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

 

Related posts

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

பருவமழை துவங்குவதற்கு முன்பாக புழல் ஏரி கால்வாய் கரையை சரிசெய்ய மக்கள் கோரிக்கை

தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை: மனைவி, கொழுந்தியாளுக்கு வலை