ஆம்பூர்: ஆம்பூரில் 6 பேர் பலியான விபத்தில் மீட்பு பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த போலீஸ் ஏட்டுவிற்கு திருப்பத்தூர் எஸ்பி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் அருகே கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிகாலை அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ் மற்றும் தனியார் ஆம்னி பஸ் நேருக்கு நேர் மோதி 6 பேர் பலியாகினர். சடலங்களை மீட்கும் பணியில் ஆம்பூர் கஸ்பா ஏ பகுதியைச் சேர்ந்த வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலைய ஏட்டு முரளி(45) ஈடுபட்டிருந்தார்.
காயமடைந்தவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தார். இதை தொடர்ந்து போலீஸ் நிலையத்திற்கு சென்று அங்கேயே படுத்துவிட்டார். சிறிது நேரத்தில் மாரடைப்பில் இறந்துள்ளார். இதை தொடர்ந்து அவரது உடல் நேற்று முன்தினம் அவரது சொந்த ஊரான ஆம்பூருக்கு கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பத்தூர் எஸ்பி ஆல்பர்ட் ஜான் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் போலீசாரின் அஞ்சலியை தொடர்ந்து அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.