இந்நிலையில், நகைக் கடைகளில் சட்டத்துக்கு புறம்பாக பண பரிவர்த்தனை செய்யப்படுகிறதா என சவுகார்பேட்டை, என்எஸ்சி போஸ் சாலை, வீரப்பன் தெரு உள்பட 6 இடங்களில் உள்ள நகைக் கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று திடீரென அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதேபோல், என்எஸ்சி போஸ் சாலையில் வெங்கடேஸ்வரா நகை கடை உள்பட மேலும் 2 நகைக்கடைகள் என மொத்தம் நான்கு கடைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுபோல, வீரப்பன் தெருவில் டிபி ஜூவல்லர்ஸ் என 2 கடைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த கடைகளில் நடத்திய சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அமலாக்கதுறை சோதனை நடத்திய என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள மோகன்லால் என்பவருடைய நகைக்கடையில் கடந்த 2020ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது, கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள் விற்பனையில் முறைகேடு செய்வதாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நகை கடைகளில் ஒரே நேரத்தில் 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது சவுகார்பேட்டை பகுதியில் உள்ள நகை கடை வியாபாரிகள் இடையே பெரும் அச்சத்தையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.