தமிழகத்தில் 14வது இடம் பிடித்தது; தர்மபுரி வனக்கோட்டத்தில் 64 யானைகள்: கணக்கெடுப்பில் உறுதியானது


தர்மபுரி: தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட யானைகள் கணக்கெடுப்பு பணி முடிவுகளின்படி, தர்மபுரி வனக்கோட்டத்தில் 64 யானைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழக அளவில் 14வது இடத்தை பிடித்துள்ளது. தென்னிந்தியாவில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி, கடந்த மே 23ம் தேதி தொடங்கி 25ம்தேதி வரை 3 நாட்கள் நடந்தது. மாநில வனத்துறை சார்பில் இப்பணி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நடந்தது. யானைகளின் எண்ணிக்கை துல்லியமாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர். அந்த வகையில், தர்மபுரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு ஆகிய மூன்று வனசரகங்களில், யானைகள் கணக்கெடுக்கும் பணி 3நாட்கள் நடந்தது.

தர்மபுரி வனக்கோட்டத்தில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தலைமையில் 2ஏசிஎப் மேற்பார்வையில் 3 வனச்சரகர்கள் அடங்கிய வனத்துறையினர், 15குழுக்களாக பிரிந்து 70பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். தர்மபுரி வனக்கோட்டத்தில் உள்ள ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு வனச்சரகத்தில் 15 வனக்காவல் சுற்று பீட்டுகளில் யானைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. கடந்த மே23ம் தேதி அடர்ந்த வனப்பகுதியில், யானைகள் நடமாடுவதை நேரில் பார்த்து கணக்கெடுக்கப்பட்டது. பாலக்கோடு, ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதியில் கூட்டமாகவும், தனியாகவும் யானைகள் நின்று கொண்டிருந்தன. அவற்றை வனத்துறை புகைப்படம் மற்றும் வீடியோ மூலம் பதிவு செய்தனர். மே 24ம் தேதி சாணம் (லத்தி), கால்தடம் வைத்து யானைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.

25ம் தேதி வனத்தில் உள்ள தடுப்பணை, குட்டை, ஏரி, ஆற்றுக்கால்வாய் மற்றும் தண்ணீர் குடிக்க வரும் தண்ணீர் தொட்டிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நேரில் பார்த்து, யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், நேரடியாக யானைகளை பார்த்து கணக்கெடுத்த வகையில், 64 யானைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் தர்மபுரி வனக்கோட்டம் 14வது இடத்தை பிடித்துள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி, கடந்த மே மாதம் 3 நாட்கள் நடந்தது. தர்மபுரி வனக்கோட்டத்தில் உள்ள 15 வனக்காவல் சுற்று பீட்டுகளில், 70பேர் கொண்ட குழுவினர் யானைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். வனத்தில் வழிகாட்ட ஏதுவாக, வாட்ஸ் அப் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டு, முதலுதவி பெட்டிகள் வழங்கப்பட்டன.

இந்த குழுவினர் கடந்த மே 23ம்தேதி முதல் 25ம் தேதி வரை யானைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். யானைகளை நேரில் பார்த்தும், அதன் கால் தடங்கள் மற்றும் சாணத்தின் மூலமாகவும் கணக்கெடுப்பு நடத்தியதில், 104 யானைகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. இதில், நேரடியாக 64 யானைகள் பார்த்ததாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. நேரடியாக பார்த்த வகையில், 64 யானைகளுடன் தர்மபுரி வனக்கோட்டம் 14வது இடத்தை பிடித்துள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

யானைகள் எண்ணிக்கை குறைந்தது
தர்மபுரி வனக்கோட்டத்தில் கடந்த ஆண்டு யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில், 144 யானைகள் இருந்ததாக கணக்கெடுப்பில் தெரியவந்தது. இது தமிழகத்தில் தர்மபுரி வனக்கோட்டம் 8ம் இடத்தை பிடித்தது. நடப்பாண்டு கணக்கெடுப்பு நடந்த காலகட்டத்தில், தர்மபுரி மாவட்டத்தில் மழை இல்லாமல், கடும் வறட்சி நிலவியது. இதனால் யானைகள் கர்நாடகாவுக்கு இடம்பெயர்ந்தன. வழக்கமாக ஏப்ரல் மாதங்களில் யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். நடப்பாண்டு மே மாதத்தில், கணக்கெடுப்பு நடத்தப்பட்டதால், யானைகள் எண்ணிக்கை குறைந்தது. தற்போது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள யானைகள், 64ம் தர்மபுரி மாவட்ட வனப்பகுதியில் நிரந்தரமாக குடும்பமாக வாழக்கூடியவை என தெரியவந்தது.

Related posts

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 975 புள்ளி உயர்ந்து 84,160-ல் வர்த்தகம்

இலங்கை அதிபருக்கான தேர்தலில் நாளை வாக்குப்பதிவு: முதன் முறையாக 38 வேட்பாளர்களுடன் சுமார் 2அடி நீளம் கொண்ட வாக்குசீட்டு தயாரிப்பு!

ஊராட்சி தலைவர் பதவியை பட்டியலின பெண்ணுக்கு வழங்கிய ஆணை ரத்து!