கோவை, நவ.8: கோவை கோவில்பாளையம் பகுதியில் போதை, கஞ்சா பொருட்கள் விற்பனை நடப்பதாக புகார் வந்தது. கோவில்பாளையம் போலீசார் வெள்ளானப்பட்டி போஸ்டல் காலனி அருகே கண்காணிப்பு பணி நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த வெள்ளானப்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் மகன் ராஜேந்திரன் (53) என்பவரை பிடித்தனர். இவரிடம் 648 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது.
போலீசார் இவற்றை பறிமுதல் செய்தனர். ராஜேந்திரனை கைது செய்துனர். இதில் தொடர்புடைய மேலும் 2 நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட போலீசார் நடப்பாண்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 552 நபர்கள் மீது 537 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவர்களிடம் 4639 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.