தூத்துக்குடி: 61 நாட்கள் மீன்பிடி தடை காலத்திற்கு பிறகு கடலுக்கு சென்ற தூத்துக்குடி விசைப்படகு மீனவர்களுக்கு அதிகளவில் மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மீன்பிடித் தடைக்காலம் முடிந்து 61 நாட்களுக்கு பிறகு நேற்று அதிகாலை தூத்துக்குடியில் இருந்து 250க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நேற்றிரவு 8 மணி முதல் கரைதிரும்பிய விசைப்படகு மீனவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக சாலை, பாறை, ஊழி, விளைமீன், நகரை, ஐலேஷ், கோழி தீவனத்திற்கு பயன்படும் கலசல் மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . அத்துடன் கேரளாவில் அரபிக்கடல் பகுதியில் மீன்பிடி தடை காலம் அமலில் இருப்பதால் கேரள மீன் வியாபாரிகள் மீன்களை வாங்க தூத்துக்குடிக்கு வந்துள்ளதால் மீன்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.