புதுடெல்லி: துர்காபூஜை வரும் அக்டோபர் 8ம் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 31ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. நவம்பர் 7 மற்றும் 8 ம்தேதிகளில் வட மாநிலங்களில் சாத் பூஜை நடக்கிறது. பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் வெளியூர்களில் இருப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இது குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று கூறுகையில்,‘‘பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் கிட்டத்தட்ட 6,000 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதற்காக,108 ரயில்களில் கூடுதலாக பெட்டிகள் சேர்க்கப்பட உள்ளன. இதற்காக மொத்தம் 12 ஆயிரத்து 500 பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 5,975 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டில் 4,429 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. 1 கோடி பயணிகள் பலன் பெறுவார்கள்’’ என்றார்.