ஏடிஎம் கொள்ளையர்களை பிடித்த 60 வயது முதியவர்

காடையாம்பட்டி: சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே ஜோடுகுளி பகுதியில், 2 ஏடிஎம் மையங்கள் உள்ளன. ஜோடுகுளி பகுதியைச் சேர்ந்த செல்வம் (60) என்பவர், தனது வீட்டின் ஒரு பகுதியை, ஏடிஎம் மையத்திற்காக வாடகைக்கு விட்டுள்ளார். நேற்று அதிகாலை 3 மணியளவில், 3 பேர் அந்த ஏடிஎம் மையத்திற்கு வந்தனர். அவர்களில் ஒருவர் மட்டும் வெளியில் இருந்துள்ளார். ஏடிஎம் மையத்திற்குள் சென்ற இருவர் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சத்தம் கேட்டு செல்வம் அங்கு வரவே ஏடிஎம் மையத்திற்கு வெளியே நின்ற நபர் டூவீலரில் தப்பி விட்டார். மற்ற 2 பேரையும் உள்ளே வைத்து ஷட்டரை இழுத்து பூட்டிவிட்டு, தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் விரைந்து வந்து ஷட்டரை திறந்து, உள்ளே இருந்த 2 பேரை பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த காஸ் சிலிண்டர், வெல்டிங் மெஷின் ஆகியவற்றை கைப்பற்றினர். ஏடிஎம்மில் இருந்த சிசிடிவி கேமராவில் தங்களது உருவம் தெரியாமல் இருக்க, ஸ்பிரே பெயின்ட் அடித்து மறைத்திருந்தனர். விசாரணையில் இருவரும் ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்