கலைஞரின் 5ம் ஆண்டு நினைவு தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி: அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னை: கலைஞரின் 5வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று காலை சென்னை அண்ணா சாலையில் அமைதி பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். டெல்லியில் கலைஞருக்கு சோனியா, ராகுல் மரியாதை செலுத்தினர். இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவராக திகழ்ந்தவர் முன்னாள் முதல்வர் கலைஞர். அவர், கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார். அவரது 5ம் ஆண்டு நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில் உள்ள கலைஞர் சிலை அருகில் இருந்து அமைதி பேரணி புறப்பட்டது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவ படத்துக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது.

வாலாஜா சாலை வழியாக சென்ற பேரணியில், திமுக பொது பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ், பொன்முடி, ஆ.ராசா, அமைச்சர்கள் எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எம்பிக்கள் தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன் மற்றும் உள்பட திமுக எம்பி, எம்எல்ஏக்கள் திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம், பகுதி செயலாளர் எஸ்.மதன்மோகன் உள்ளிட்ட திமுக முன்னணியினர், தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பலர் கருப்பு சட்டை அணிந்து பேரணியில் பங்கேற்றனர். காலை 8.10 மணிக்கு தொடங்கிய பேரணி காமராஜர் சாலையில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு காலை 8.50 மணிக்கு வந்தடைந்தது. அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

நினைவு தினத்தை முன்னிட்டு கலைஞர் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதில், ‘‘நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞரின் 5ம் ஆண்டு நினைவை போற்றுவோம்’’ என்ற வாசகம் மலர்களால் இடம்பெற்றிருந்தது.
முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கலைஞர் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று அவரின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதேபோன்று, சிஐடி காலனியில் உள்ள இல்லத்திலும் கலைஞரின் உருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து, திமுக தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞரின் உருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். மேலும் முரசொலி வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கும் முதல்வர் மரியாதை செலுத்தினார். இதேபோன்று தமிழ்நாடு முழுவதும் கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலை, உருவப் படத்துக்கு திமுகவினர் மரியாதை செய்தனர். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

Related posts

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்