Saturday, September 28, 2024
Home » 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த விவகாரம் மூவரசம்பட்டு கோயில் குளம் தற்காலிகமாக மூடல்: பொதுமக்கள் உள்ளே நுழையாதபடி போலீஸ் பாதுகாப்பு; நிகழ்ச்சி நடத்தியவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை

5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த விவகாரம் மூவரசம்பட்டு கோயில் குளம் தற்காலிகமாக மூடல்: பொதுமக்கள் உள்ளே நுழையாதபடி போலீஸ் பாதுகாப்பு; நிகழ்ச்சி நடத்தியவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை

by Karthik Yash

சென்னை: நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வர் கோயில் திருவிழாவின்போது, மூவரசம்பட்டு கோயில் குளத்தில் பாராயணம் ஓதுகையில் 5 இளம் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த விவகாரத்தை தொடர்ந்து, கோயில் குளம் தற்காலிகமாக மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டார்களிடம் அறநிலையத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நங்கநல்லூர் எம்.எம்.டி.சி., காலனியில் தர்மலிங்கேஸ்வரர் கோயிலில், பங்குனி உத்திர தீர்த்த வாரி நடந்தது. இதற்காக நேற்று முன்தினம் காலை மூவரசம்பட்டில் உள்ள ஸ்ரீ கங்கையம்மன் கோயில் குளத்தில் தீர்த்தவாரி.

அப்போது, சாமி சிலையை குளக்கரையில் உள்ள படித்துறையில் வைத்து 25 அர்ச்சகர்கள் மார்பளவு நீரில் நின்றபடி பாராயணம் செய்தனர். அப்போது குளத்து நீரில் அர்ச்சர்கள் மூழ்கி எழுந்தனர். அதில், ஒரு அர்ச்சகர் மட்டும் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றபோது மூழ்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த மேலும் 4 அர்ச்சகர்கள் அவரை காப்பற்ற முயன்றனர். துரதிருஷ்டவசமாக அடுத்ததுத்து 5 அர்ச்சகர்களும் நீரில் மூழ்கி இறந்தனர். அவர்களின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். சம்பவம் நடந்த குளத்தின் பகுதியை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேரில் ஆய்வு செய்தார்.

அதைதொடர்ந்து, 5 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று அவர்களது உறவினர்களிடம் அளிக்கப்பட்டது. அதைதொடர்ந்து அவர்களின் உடல்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே மூவரசம்பட்டு கெங்கையம்மன் கோயில் குளத்தை பயன்படுத்த எந்த வித முன் அனுமதியும் பெறாமல் தீர்த்தவாரி மற்றும் தெப்ப திருவிழா நடத்த ஏற்பாடு செய்த தர்மலிங்கேஸ்வரர் கோயில் நிர்வாகிகளிடம் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் மூவரசம்பட்டு விஏஓ சிவக்குமார், பழவந்தாங்கல் காவல் நியைத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் முதற்கட்டமாக ஐபிசி 174 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், விபத்து நடந்த ஸ்ரீ கங்கையம்மன் கோயில் குளத்தை மூவரசம்பட்டு ஊராட்சி நிர்வாகம் பூட்டு போட்டு தற்காலிகமாக மூடியது. மேலும், ‘மூவரசம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீ கங்கையம்மன் கோயில் திருக்குளம் ஆழமான பகுதி பாதுகாப்பு கருதி இந்த குளத்தில் இறங்ககூடாது’ என்று பேனர் வைக்கப்பட்டுள்ளது. குளத்தில் யாரும் இறங்காதபடி எஸ்ஐ தலைமையில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. அதேபோல், நுங்கம்பாக்கத்தில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலின் பங்குனி உத்திர திருவிழாக சிறப்பாக நடந்து வந்த நிலையில், 5 அர்ச்சகர்கள் உயிரிழந்ததால், தற்காலிகமாக தெப்பத்திருவிழா உள்ளிட்ட அனைத்து கோயில் நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், கோயிலின் நடை மூடப்பட்டு ‘தவிர்க்க முடியாத காரணத்தினால் பொது தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது’ என்று கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து பழவந்தாங்கல் போலீசார் கோயில் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்த நிர்வாகிகள் மற்றும் குளத்திற்கு அனுமதி வழங்கிய கிராம முக்கிய பிரமுர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

sixteen − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi