ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் ராணுவ ரோந்து வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி, துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஜம்முவில் தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் அண்மையில் அதிகரித்துள்ளன. காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்தோடு பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி இந்தியாவுக்குள் நுழைந்துள்ள தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் கதுவா மாவட்டம், மச்செடி-கிண்ட்லி-மல்ஹார் சாலையில் நேற்று மாலையில் ராணுவத்தினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பட்னோட்டா என்ற கிராமத்திற்கு அருகே ராணுவ கான்வாய் வந்த போது கையெறி குண்டுகளை வீசி தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த தாக்குலில் 10 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் 5 வீரர்கள் வீரமரணமடைந்தனர். ராணுவம் மீது தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் அருகில் உள்ள காட்டுக்குள் சென்று ஓளிந்துள்ளனர்.
இதையடுத்து காஷ்மீரின் பிற பகுதிகளில் இருந்து ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கதுவா மாவட்டத்தில் சமீப நாட்களில் நடந்த 2வது பெரிய தீவிரவாத தாக்குதலாகும் இது ஆகும்.