தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில்`புஷ் துரோ’ முறையில் 56மீ கல்வெட்டு பதிப்பு: நெடுஞ்சாலைத்துறை சாதனை

சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக தாம்பரம் – மதுரவாயல் நெடுஞ்சாலையில் `புஷ் துரோ’ முறையில் 56 மீட்டர் கல்வெட்டை பதித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாதனை படைத்துள்ளனர். பருவமழை தொடங்கும் போதெல்லாம் போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்து தந்தி கால்வாய் மூலமாக வரும் நீரால் அய்யப்பன் தாங்கல், பரணி புத்தூர், கொளுத்துவான்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்குவது வழக்கம். இதனால் ஏராளமான குடியிருப்புகள் பாதிப்புக்குள்ளாகும். மேலும், மழைநீர் வடிய காலதாமதம் ஏற்படுவதால் கடந்த ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த பகுதியில் ஆய்வு செய்து, மழைநீர் கால்வாய் அமைக்க உத்தரவிட்டார். அதன்படி ரூ.100 கோடி செலவில் கட் அண்ட் கவர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து முடிந்தது. தற்போது தாம்பரம் – மதுரவாயல் நெடுஞ்சாலையை கடந்து மழைநீர் செல்ல வழி இல்லாததால், தாம்பரம் – மதுரவாயல் நெடுஞ்சாலையை ஏதும் உடைக்காமல் ‘‘புஷ் துரோ” முறையில் தாம்பரம் – மதுரவாயல் பைப்பாஸ் சாலையின் கீழ், 56 மீட்டருக்கு கல்வெட்டு அமைக்கும் பணி நடந்து முடிந்தது. ஒரு கல்வெட்டு 11 மீட்டர் நீளமும், 5 மீட்டர் அகலமும், 1.4 மீட்டர் உயரம் கொண்டதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வெட்டின் மீது கனமான இரும்பு அமைக்கப்பட்டு கம்பரசர் மூலமாக அழுத்தம் கொடுத்து “புஷ் துரோ’’ முறையில் ஒன்றன்பின் ஒன்றாக செலுத்தப்பட்டது. நாள் ஒன்றுக்கு 2 மீட்டர் மட்டுமே செலுத்த முடியும். தற்போது வரை 56 மீட்டரில் சாலையின் நடுவே 44 மீட்டரும், சாலைக்கு வலது புறமும், இடது புறமும் தலா 6 மீட்டர் விட்டு, புஷ் அண்ட் துரோ கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சாலை விரிவாக்க பணி நடந்தால் இந்த பகுதியில் கல்வெட்டின் மீது சாலை அமைத்து கொள்ளலாம் என்ற காரணத்திற்காக இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடித்துவிட்டு, தார்சாலைகள் அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ரயில்வே துறையில் மட்டுமே சாத்தியமான பணியை தற்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வாகன போக்குவரத்து மிகுந்த தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையை உடைக்காமலும், போக்குவரத்தை தடைசெய்யாமலும், இரண்டு புஷ் அண்ட் துரோ கல்வெட்டை அமைத்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை