சென்னை: 56 கண் நோயாளிகளின் இலவச அறுவை சிகிச்சைக்காக சன் டி.வி. 75 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, மருத்துவச் சிகிச்சை, சமூக மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. பல்வேறு அமைப்புகளுக்கு தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தோருக்கு இலவச சிகிச்சை அளிப்பதற்காக சன் டி.வி. 75 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது.
இதற்கான காசோலையை, அகர்வால் கண் மருத்துவமனையின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான டாக்டர் அமர் அகர்வால், செயலாளர் ஐதியா அகர்வால், தலைமைச் செயல் அதிகாரி ஆதில் அகர்வால் ஆகியோரிடம் சன் டி.வி. சார்பில் காவேரி கலாநிதி மாறன் வழங்கினார். இந்த நிதி உதவியின் மூலம் 8 குழந்தைகள் உள்பட 56 பேருக்கு இலவசமாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட உள்ளது.நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த கண் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிப்பதற்காக அகர்வால் கண் மருத்துவமனைக்கு சன் டி.வி. மற்றும் சன் பவுண்டேஷன் தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகின்றன. சன் டிவி மற்றும் சன் பவுண்டேஷன் இதுவரை அளித்த நிதி உதவியின் மூலம் அகர்வால் கண் மருத்துவமனையில் 8 ஆயிரத்து 555 பேருக்கு இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.