டெங்கு பாதிப்பு ஏடிஸ் வகை கொசு கடிப்பதால் ஏற்படுகிறது. இந்த வகை கொசுக்கள் நன்னீரில் வாழும் தன்மை கொண்டது. பரவலாக மழை பெய்து வருவதால் மழை நீர் ஆங்காங்கே தேங்கி நின்று, அதன் மூலம் கொசு அதிகரிக்கிறது. அதனால், ஏடிஸ் கொசுவை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இருப்பினும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலான மழை பெய்து வரும் சூழலில் டெங்கு பாதிப்பும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் கடந்த 10ம் தேதி 86 பேர், 11ம் தேதி 83 பேர், 12ம் தேதி 106 பேர், 13ம் தேதி 71 பேர், 14ம் தேதி 71 பேர், 15ம் தேதி 37 பேர், 16ம் தேதி 114 பேர் என மொத்தம் 568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 16ம் தேதி வரை 5976 நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 2 நபர்கள் மட்டுமே இறந்துள்ளனர். இந்த டெங்கு பரவலை தடுக்க பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை சுற்றி மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும், தண்ணீர் தொட்டிகள், தண்ணீரை சேமித்து வைக்கும் இடங்களை பாதுபாப்பாக மூடி வைக்கவும், மாநகராட்சி பணியாளர்கள் கொசு மருந்து தெளிக்கவும், அதனை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்கவும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.