இந்நிலையில் முக்கிய குற்றவாளியான புதுவை மாதேஷ், பிரபல சாராய வியாபாரிகள் கருணாபுரம் கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சேஷசமுத்திரம் பிரபல சாராய வியாபாரி சின்னதுரை உள்பட 11 பேர்களை சிபிசிஐடி போலீசார் மூன்று நாள் காவல் விசாரணைக்கு எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சாராய வியாபாரிகளுடன் நேரடி தொடர்பில் இருந்த உள்ளூர் காவலர்கள் முதல் வெளியூர் காவலர்கள் வரை யார்? யார்? தொடர்பில் இருந்தனர் என்ற விபரங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும் பல சாராய வியாபாரிகளுடன் நேரடி தொடர்பில் இருந்த போலீசாரின் விபரங்களை சாராய வியாபாரிகளின் செல்போன் நம்பர்களை கொண்டு விவரம் சேகரிக்கப்பட்டுள்ளன.இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணியாற்றி வரும் உள்ளூர் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் மதுவிலக்கு காவல்துறை அதிகாரிகளின் பட்டியல்களும், தனிப்பிரிவு காவலர்கள் பெயர் பட்டியல் விபரங்களை சேகரிக்கப்பட்டதில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் மெத்தனால் கலந்த விஷ சாராயம் விவகாரத்தில் முன்ேப கண்டறிந்து தடுக்க தவறியதாக சில காவல்துறை அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு பெயர் பட்டியல் விபரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் சம்மந்தப்பட்ட காவல்துறையினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.