சென்னை: கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.5,000 வழங்க உத்தரவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் கரும்புகளுக்கு கடந்த ஆண்டில் கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.2,821 வழங்கப்பட்டது. இப்போது ரூ.98 மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இது வெறும் 3.47% மட்டுமே உயர்வு ஆகும். இந்த கொள்முதல் விலையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கரும்பு சாகுபடியை லாபமானதாக மாற்ற வேண்டுமானால், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரை அதன் உண்மையான உணர்வுடன் செயல்படுத்தப்பட வேண்டும். அதன்படி, ஒரு டன் கரும்புக்கான உற்பத்திச் செலவு ரூ.3,500 என்பதை அடிப்படையாகக் கொண்டு, அத்துடன் 50% லாபம், அதாவது ரூ.1750 சேர்த்து கொள்முதல் விலையாக ரூ.5,250 நிர்ணயிக்க வேண்டும். குறைந்தது கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.5000 கொள்முதல் விலையாக வழங்க ஒன்றிய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.