Monday, July 1, 2024
Home » 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த விவகாரம்: கோயில் குளம் தற்காலிகமாக மூடல்; நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் அறநிலையத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை

5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த விவகாரம்: கோயில் குளம் தற்காலிகமாக மூடல்; நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் அறநிலையத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை

by MuthuKumar

சென்னை: நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயில் திருவிழாவின் போது, மூவரசம்பட்டு கோயில் குளத்தில் பாராயணம் ஓதும் போது 5 இளம் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து, கோயில் குளம் தற்காலிகமாக மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் அறநிலையத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நங்கநல்லூர் எம்.எம்.டி,சி காலனியில் புகழ்பெற்ற தர்மலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பங்குனி உத்திர தீர்த்த வாரி திருவிழா நடந்தது. இதற்காக தர்மலிங்கேஸ்வரர் கோயில் நிர்வாகம் சார்பில் மூவரசம்பட்டில் உள்ள கெங்கையம்மன் கோயிலுக்கு சொந்தமான குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

அப்போது, அர்ச்சகர்கள் சாமி சிலையை குளக்கரையில் உள்ள படித்துறையில் வைத்து 25 அர்ச்சகர்கள் மார்பளவு தண்ணீரில் நின்றபடி பாராயணம் ஓதும் நிகழ்வு நடந்தது. அப்போது ஒவ்வொருவராக தண்ணீரில் மூழ்கி எழுந்த போது, ஒரு அர்ச்சகர் மட்டும் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். இதனால் சக அர்ச்சகர்கள் அவரை காப்பாற்ற முயன்ற போது, அடுத்ததுத்து 4 அர்ச்சகர்கள் என 5 அர்ச்சகர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழ்ந்தனர். தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அவர்களது உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விபத்து நடந்த மூவரசம்பட்டு கோயில் குளத்திற்கு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேரில் வந்து ஆய்வு செய்தார். அதைதொடர்ந்து உயிரிழந்த 5 பேரின் உடல்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மாலை உறவினர்களிடம் அளிக்கப்பட்டது. அதைதொடர்ந்து 5 பேர் உடல்கள் அவரவர் வீடுகளுக்கு கொண்டு சென்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், மூவரசம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜி.கே.ரவி, மாநகராட்சி கவுன்சிலர்கள் துர்கா தேவி, ஷர்மியா திவாகர், ஜெ.கே.மணிகண்டன், ஷெர்லி ஜெய் ஆகியோர் உயிரிழந்த 5 பேர் வீடுகளுக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது அமைச்சர் உயிரிழந்த அர்ச்சகர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதற்கிடையே மூவரசம்பட்டு கெங்கையம்மன் கோயில் குளத்தை எந்த வித முன் அனுமதியும் பெறாமல் தீர்த்தவாரி மற்றும் தெப்ப திருவிழா நடத்த ஏற்பாடு செய்த தர்மலிங்கேஸ்வரர் கோயில் நிர்வாகிகளிடம் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் மூவரசம்பட்டு கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார், பழவந்தாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேநேரம், குளத்தில் 5 அர்ச்சகர்கள் உயிரிழந்த விபத்து குறித்து மூவரசம்பட்டு கிராம நிர்வாகி சிவக்குமார் பழவந்தாங்கல் காவல் நியைத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் முதற்கட்டமாக ஐபிசி 174 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், விபத்து நடந்த கெங்கையம்மன் கோயில் குளத்தை மூவரசம்பட்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில் பூட்டு போட்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குளத்தின் நுழைவு வாயிலின் முன்பு ‘மூவரசம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட கங்கையம்மன் கோயில் திருக்குளம் ஆழமான பகுதி பாதுகாப்பு கருதி இந்த குளத்தில் இறங்ககூடாது’ என்று பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர எஸ்ஐ தலைமையில போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலின் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடந்து வந்த நிலையில், 5 அர்ச்சகர்கள் உயிரிழந்ததால், தற்காலிகமாக தெப்பத்திருவிழா உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், கோயிலின் நடை மூடப்பட்டு ‘தவிர்க்க முடியாத காரணத்தினால் பொது தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது’ என்று கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து பழவந்தாங்கல் போலீசார் கோயில் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்த நிர்வாகிகள் மற்றும் குளத்திற்கு அனுமதி வழங்கிய கிராம முக்கிய பிரமுர்களிடமும், பொது நிகழ்ச்சி நடக்கும் போது, போலீஸ் பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு துறையினரிடம் முன் அனுமதி பெறாதது ஏன் என்பது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவத்தால் குளம் அமைந்துள்ள மூவரசம்பட்டு மற்றும் கோயில் அமைந்துள்ள நங்கநல்லூர் பகுதியில் மக்கள் சோகத்துடன் காணப்பட்டனர்.

You may also like

Leave a Comment

2 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi