பெங்களூரு: பெங்களூருவில் பெய்த கனமழையால் ஒட்டுமொத்த நகரமே வெள்ளக்காடாக மாறி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தலைநகர் பெங்களூரு உள்பட பல மாவட்டங்களில் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. இந்த நிலையில் பெங்களூரு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்தது. சில இடங்களில் இரவு முழுவதும் பெய்த மழையால் பெங்களூரின் அனைத்து சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மழை வெள்ளம் இடுப்பு அளவுக்கு தேங்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மாரத்தஹள்ளி-சர்ஜாப்பூர் அவுட்டர் ரிங் ரோட்டில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்புகளின் அடித்தளங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. பழைய விமான நிலைய சாலையில் வெள்ளத்தில் பஸ்கள் சிக்கி கொண்டன. கனமழை-வெள்ளம் காரணமாக பெங்களூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அவசர தேவைகள் தவிர, வீடுகளை விட்டு வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள். புறநகரில் உள்ள ஐ.டி. நிறுவனங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. கடந்த ஒரு வாரத்தில் 2வது முறையாக பெங்களூரு நகரம் வெள்ளத்தில் மிதந்து வருகிறது. கடந்த 30-ந்தேதி பெய்த பலத்த மழையால் பல இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது மீண்டும் பலத்த மழை பெய்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். வருகிற 7ம்தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதற்கிடையே, நேற்று மாலை முதல் மீண்டும் பல பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியதால், பெங்களூர் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.*கேரளாவில் ரெட் அலர்ட்கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழையின் தீவிரம் இன்னும் குறையவில்லை. தொடர் மழை காரணமாக பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு கேரளா முழுவதும் மிக பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று (6ம் தேதி) திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் இடுக்கி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா, கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. …