சாலையோரம் நிறுத்தியிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதி 4 பேர் பலி

திருமலை: ஆந்திராவில் இன்று அதிகாலை சாலையோரம் நிறுத்தியிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் இறந்தனர். சிறுவன் படுகாயம் அடைந்தான். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து ராஜமுந்திரிக்கு நள்ளிரவு ஒரு கார் புறப்பட்டது. காரில் டிரைவர், சிறுவன் உட்பட 5 பேர் இருந்தனர். ஏலூர் மாவட்டம் துவாரகா திருமலை லட்சுமி நகர் அருகே இன்று அதிகாலை சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நிறுத்தியிருந்த கன்டெய்னர் லாரியின் பின்னால் மோதியது. இந்த விபத்தில் கார் கன்டெய்னருக்குள் புகுந்து நொறுங்கியது. இதனால் காரில் வந்தவர்களில் டிரைவர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். சிறுவன் படுகாயத்துடன் உயிர் தப்பினான்.

விபத்தை கண்ட பொதுமக்கள் அங்கு வந்து சிறுவனை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த துவாரகா திருமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை மீட்டு இடிபாடுகளை அகற்றி 4 பேரின் சடலங்களை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார் டிரைவரின் தூக்க கலக்கம் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கும் என போலீசார் கருதுகின்றனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related posts

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்