புதுடெல்லி: நான்கு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல் முடிந்து கடந்த 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ஜனவரி ஒன்றாம் தேதி தகுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டு மக்களவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் அரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டமன்ற பதவிக்காலம் முறையே நவம்பர் 3, நவம்பர் 26 மற்றும் ஜனவரி 5ம் தேதி முடிவடைகிறது. மேலும் ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் இறுதிக்குள்தேர்தலை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே 4 மாநிலங்களிலும் செப்டம்பர், அக்டோபரில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படவேண்டும். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதற்காக வாக்காளர் பட்டியலை புதுப்பிப்பதற்கு ஜூலை ஒன்றாம் தேதி தகுதி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரிலும் ஜூலை ஒன்றாம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலை புதுப்பிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.