சண்டிகர்: தெருநாய் கடித்தால் ஒரு பல் தடத்துக்கு ரூ. 10,000 வீதம் மாநில அரசு அபராதம் செலுத்த வேண்டும் என்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் வினோத தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் தெருவில் சுற்றி திரியும் வீட்டு விலங்குகளால் காயப்பட்ட, நிரந்தர மாற்றுதிறனாளிகளான மற்றும் உயிரிழந்தவர்கள் இழப்பீடும் கோரியது தொடர்பான 193 வழக்குகள் விசாரணையில் உள்ளன.
இவற்றை விசாரித்த நீதிபதி வினோத் பரத்வாஜ் அமர்வு அளித்த தீர்ப்பில், ‘’கைவிடப்பட்டு தெருக்களில் சுற்றி திரியும் பசுக்கள், காளைகள், எருதுகள், கழுதைகள், நாய்கள் எருமைமாடுகள், மான்கள் உள்ளிட்டவற்றினால் ஏற்படும் அசம்பாவிதங்கள், விபத்துகள் குறித்த புகார் கிடைத்த உடன் எவ்வித தாமதமும் இன்றி போலீசார் தினசரி நாட்குறிப்பு அறிக்கை பதிவு செய்ய வேண்டும். இந்த புகாரின் உண்மை தன்மை குறித்த அறிக்கை தயாரித்து அதன் நகல் ஒன்றை மனுதாரருக்கு அனுப்ப வேண்டும். இது தொடர்பான உத்தரவுகளை பஞ்சாப், அரியானா மாநிலங்களின் டிஜிபி.க்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
மேலும், பஞ்சாப், அரியானா, சண்டிகர் நிர்வாகம் அந்தந்த மாவட்டத்தின் துணை ஆணையர்கள் தலைமையில் கமிட்டி ஒன்றை உருவாக்கி தெருக்களில் சுற்றி திரியும் விலங்குகளால் ஏற்படும் விபத்துக்கான இழப்பீட்டு தொகையை நிர்ணயிக்க வேண்டும். மேலும் சரியான ஆவணங்களுடன் மனு தாக்கல் செய்தால் 4 மாதத்துக்குள் இழப்பீட்டை பெற்று தர வேண்டும். முதன்மை பொறுப்புதாரர் என்ற அடிப்படையில் மாநில அரசு இழப்பீட்டை முதலில் வழங்கி விட்டு, பின்னர் சம்பந்தப்பட்டவர்களிடமோ அல்லது நிறுவனத்திடம் இருந்தோ இழப்பீட்டு தொகையை வசூலித்து கொள்ளலாம். அதன்படி, தெருநாய் கடித்த வழக்கில் நாயின் ஒரு பல் தடத்துக்கு ரூ. 10,000 வீதம் மாநில அரசு அபராதம் செலுத்த வேண்டும்,’’ என்று தீர்ப்பளித்தது.