இந்த உத்தரவை எதிர்த்து தற்காலிக ஆசிரியர்கள் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்குகள் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் கே.குமரேஷ் பாபு அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பல்கலைகழக நிர்வாகத்தை நோக்கி சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பல்கலைக்கழகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமமான ஏஐசிடிஇ விதிமுறைப்படி உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் என 1,745 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் 981 பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கபட்டுள்ளது.
அதில், 556 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 425 இடங்கள் காலியாக உள்ளன. ஏஐசிடிஇ விதிமுறைப்படியான இடங்களில் 1,189 காலியாக உள்ளன. வழக்குகள் நிலுவையில் இருந்ததால் காலியிடங்களை நிரப்ப முடியவில்லை என்று கூறப்பட்டிருந்தது. இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. 2020ல் தனி நீதிபதி காலி பணியிடங்களை நிரப்ப வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்த பிறகு 3 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் தான் சிண்டிகேட் கூட்டம் நடத்தப்பட்டது. இவ்வளவு காலியிடங்களை வைத்துக்கொண்டு எப்படி செயல்படுகிறது என்று தெரியவில்லை. இடைப்பட்ட 3 ஆண்டுகளில் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன்? 425 காலியிடங்களுடன் எப்படி செயல்படுகிறது என்று விளக்கம் அளிக்குமாறு பல்கலைக்கழக பதிவாளருக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். தவறினால் பதிவாளர் நேரில் ஆஜராக வேண்டி வரும் எனவும் எச்சரித்தனர்.