கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மாதந்தோறும் 4.17 லட்சம் குடும்ப தலைவிகள் பயன்

* கூலி தொழிலாளிகளுக்கு சிறந்த திட்டம்

* நெஞ்சம் நிறைந்தது முதல்வருக்கு பாராட்டு

தஞ்சாவூர் : கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மாதந்தோறும் 4.17 லட்சம் குடும்ப தலைவிகள் பயனடைந்து வருகின்றனர். கூலி தொழிலாளிகளுக்கு சிறந்த திட்டம், நெஞ்சம் நிறைந்தது முதல்வருக்கு பாராட்டு என்று பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பெண்களின் முன்னேற்றத்திற்காக அடுக்கடுக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள். அரசு பேருந்துகளில் மகளிருக்கு கட்டணம் இல்லா பயணம், கல்லூரி மாணவியருக்கு உயர்கல்விக்கு ஊக்கமளித்திட மாதந்தோறும் ரூ.1000 போன்ற சிறப்பான திட்டங்களின் வரிசையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மகத்தான திட்டமாக மகளிர் குலம் போற்றுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் நலன்காக்கும் மகத்தான திட்டங்களின் வரிசையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டும் சிறப்பான திட்டமாகும் என்றால் அது மிகையல்ல . தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு உரிய விதிமுறைகளைப் பின்பற்றி மாதந்தோறும் 1000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் இந்தத்திட்டத்தின் மூலம் நாளது வரையில் 1 கோடியே 15 லட்சம் குடும்பத் தலைவிகள் பயனடைந்துள்ளனர்.

திட்ட பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர் வட்டத்தைச் சேர்ந்த 22,660 குடும்பத் தலைவிகள், கும்பகோணம் வட்டத்தைச் சேர்ந்த 69,549 குடும்பத் தலைவிகள், ஒரத்தநாடு வட்டத்தைச்சேர்ந்த 47,376 குடும்பத் தலைவிகள், பாபநாசம் வட்டத்தைச் சேர்ந்த 52,282 குடும்பத் தலைவிகள், பட்டுக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த 75,896 குடும்பத் தலைவிகள், பேராவூரணி வட்டத்தைச் சேர்ந்த 24,505 குடும்பத் தலைவிகள், தஞ்சாவூர் வட்டத்தைச் சேர்ந்த 59,735 குடும்பத் தலைவிகள், திருவையாறு வட்டத்தைச் சேர்ந்த 22,470 குடும்பத் தலைவிகள், திருவிடைமருதூர் வட்டத்தைச் சேர்ந்த 43,526 குடும்பத் தலைவிகள் என மொத்தம் இத்திட்டத்தின் வாயிலாக 4,17,999 குடும்பத் தலைவிகள் பயன்பெற்றுள்ளனர் என்றார்.

இத்திட்டத்தின் பயன் குறித்து பயனாளிகள் தெரிவித்ததாவது: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் மாதந்தோறும் ரூ.1000 வழங்குகிற மகத்தான திட்டம் தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜமிடம் பேராவூரணி வட்டம் கொன்றைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜபிரியா, மிதியக் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜெயராணி ஆகியோர் தெரிவித்தனர். அன்றாடம் கூலி வேலை செய்து வருகிற எங்களைப் போன்ற எளியவர்களின் வாழ்க்கையில் மாதந்தோறும் ரூ.1000 வழங்குவது தமிழக அரசின் சிறந்த திட்டமாகும். இந்த நல்ல திட்டத்தை தந்துள்ள முதலமைச்சருக்கு ரொம்பவும் நன்றி என்று தெரிவித்தனர்.

Related posts

ஹிஸ்புல்லா தலைவர் இருப்பிடத்தை காட்டிகொடுத்த ஈரான் ஸ்பை: லெபனானில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல் ராணுவம்

பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு – இயக்குநர் மோகன் மன்னிப்பு கேட்க உத்தரவு

ஒசூரில் ரூ.3,699 கோடியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் செல்போன் உற்பத்தி ஆலை விரிவாக்கம்