4 பேரை வெட்டிக்கொன்றவர்களை உடனே கைது செய்ய வேண்டும்

திருச்செங்கோடு, செப்.5: பல்லடம் அருகே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை வெட்டி கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஈஸ்வரன் எம்எல்ஏ வலியுறுத்தினார். கொமதேக பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு எம்எல்ஏவுமான ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே, மாதாப்பூர் ஊராட்சி கள்ளக்கிணறு என்ற இடத்தில், நேற்று முன்தினம் மாலை, தங்கள் தோட்டத்திற்குள் மது அருந்தியவர்களை தடுத்து கேட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த செந்தில்குமார், மோகன்ராஜ், புஷ்பவதி, ரத்தினாம்பாள் ஆகிய 4 பேரை, அரிவாளால் கொடூரமான முறையில் வெட்டிக் கொன்ற கொலையாளிகளை, தாமதமின்றி தமிழக அரசு கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மதுபான கடைகளில் மது வாங்குபவர்க, அருகில் இருக்கின்ற இடங்களுக்கு சென்று அமர்ந்து மது அருந்துவது வாடிக்கையாக இருக்கிறது. கொலை நடத்தப்பட்ட விதத்தை பார்க்கும் போது, அதற்காக மட்டுமே இது நடந்திருக்குமா என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது. முன்பகை ஏதும் இருக்குமோ என்ற ஐயமும் எழுகிறது.

போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி, உண்மையை கண்டறிந்து கொலை செய்தவர்கள் மீது, தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். துரிதமான நடவடிக்கை தான், இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடப்பதை தடுக்கும். அந்தப் பகுதி மக்களிடையே அச்சத்தை போக்கும். கொங்கு மண்டலத்தில் இது போன்ற நிகழ்வுகள், பல பகுதிகளிலே தொடர்ந்து நடந்தேறி வருகிறது. போலீசார் இதையெல்லாம் கவனத்தில் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. காவல்துறை உயர் அதிகாரிகள் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில், எப்படிப்பட்ட தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

12 மணி நேரம் போக்குவரத்து தடை ஆடிப்பெருக்கு விழா கோலாகல கொண்டாட்டம் பிணையம் வழங்க போலி ஆவணங்கள் தாக்கல்

கனரக லாரி மோதியதால் விரிசல் ஏற்பட்ட சமயபுரம் நுளைவு வாயில் இடித்து அகற்றம்

குடிநீர் வடிகால் வாரிய தலைமை நீரேற்று நிலையத்தில் அதிகாரி ஆய்வு