வேலூர், மே 13: வேலூர் அருகே உள்ள தனியார் 4 சக்கர நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வேலூர் அருகே 4 சக்கர வாகனங்களின் விற்பனை மற்றும் சேவையை நாங்கள் செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் வணிகத்தை மேற்கொண்டுள்ளோம். 2014ம் ஆண்டு ஸ்பேர் பார்ட்ஸ் இன்சார்ஜ் ஆக ஒரு நபரை நியமித்தோம். இதற்கிடையில் கடந்த 2022ம் ஆண்டு நிறுவனத்தில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஸ்பேர் பார்ட்ஸ் இன்சார்ஜ் ₹39.83லட்சம் முறைகேடாக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. அவர் அலுவலகத்திற்கு வருவதில்லை. தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. எனவே அவரிடம் விசாரித்து, ₹39.83லட்சம் பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.