கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் தனியார் இரும்பு குழாய் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொழிற்சாலை நிர்வாகம், முன்னறிவிப்பு ஏதுமின்றி 34 தொழிலாளர்களை திடீரென பணி நீக்கம் செய்துவிட்டு, அவர்களுக்கு பதிலாக வட மாநிலத்தவரை பணியமர்த்த முயன்றது. இதனை கண்டித்து தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு அதிகாரிகளின் தலையீட்டின் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் அப்போது மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இந்த நிலையில் நான்கு தினங்களுக்கு முன்பு 4 தொழிலாளர்களை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. இதனைக் கண்டித்து சக தொழிலாளர்கள் கடந்த நான்கு நாட்களாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக கிராம மக்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஊர்வலமாக சென்று சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை முற்றுகையிட முயன்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மகேஷ், ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் அய்யனார் ஆகியோர் ஓரிரு தினங்களில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண்பதாக அளித்த உறுதியை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்ட கிராம மக்கள். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டி வரும் எனவும் எச்சரித்தனர்….