3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலை; 10 லட்சம் கோடிக்கு முதலீடுகள் குவிந்தன: முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கிவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில், ரூ.17,616 கோடி முதலீட்டில் 64,968 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 19 தொழில் திட்டங்களையும், ரூ.51,157 கோடி முதலீட்டில் 41,835 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய 28 தொழில் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம். இதன் மூலம் 31 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் ரூ.51,157 கோடியில் 28 திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.17,616 கோடி முதலீட்டில் முடிவுற்ற 19 திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இதன்மூலம் ரூ.1,06,803 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021ம் ஆண்டு முதல்வராக பதவியேற்றதில் இருந்து தமிழகத்தில் தொழில் முதலீடுகள் அதிகரித்து வருகிறது. தொழில் தொடங்க ஏற்ற சூழ்நிலைகளை முதல்வர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

எளிய அணுகுமுறை, தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், மின்சாரம், குடிநீர், கழிவுநீர், சாலை போன்ற வசதிகளை உடனடியாக நிறைவேற்றிக் கொடுத்தல் உள்பட பல சலுகைகளை முதல்வர் வழங்கியுள்ளார். இதன்மூலம் இந்தியாவில் இருந்து மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன. லஞ்ச, ஊழல் இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்பட்டு வருகிறது. முதல்வரின் எளிமையான அணுகுமுறையால் தொழில் அதிபர்கள் போட்டி போட்டு தமிழகத்தில் தொழில் தொடங்குகின்றனர். இதனால், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.17,616 கோடி முதலீட்டில் 64,968 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 19 தொழில் திட்டங்களை தொடங்கி வைத்து, ரூ.51,157 கோடி முதலீட்டில் 41,835 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 28 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாட்டின் தொழில்துறை வரலாற்றிலும், வளர்ச்சி வரலாற்றிலும் இது மிக மிக முக்கியமான நாள். நம்முடைய பொருளாதார திறனை உலகிற்கு எடுத்துக் காட்டும் நாளாகவும், தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை உணர்த்தும் நாளாகவும் இந்த நாள் அமைந்திருக்கிறது.

சில திட்டங்களை துவக்கி வைக்கவும், சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் நான் வந்திருக்கிறேன். 19 வகையான திட்டங்களை இன்றைக்கு தொடங்கி வைத்திருக்கிறேன். ரூ.17 ஆயிரத்து 616 கோடி மதிப்பிலான இந்த திட்டங்கள் மூலமாக, 64 ஆயிரத்து 968 பேருக்கு வேலைகள் கிடைக்கப்போகிறது. 28 வகையான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். இதன் மொத்த முதலீட்டு மதிப்பு ரூ.51 ஆயிரத்து 157 கோடி. இதன்மூலமாக, 41 ஆயிரத்து 835 பேருக்கு வேலைகள் கிடைக்கும்.

தொழில் வளர்கிறது என்றால், அந்த நிறுவனம் மூலமாக, மாநிலம் வளர்கிறது; கிடைக்கும் வேலைவாய்ப்புகள் மூலமாக குடும்பங்களும் வளர்கிறது; வாழ்கிறது. அந்த வகையில், வளர்ச்சியின் அடையாளமாக தொழில் நிறுவனங்கள் இருக்கிறது. அமைதியான சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் மாநிலத்தை தேடித்தான் தொழில்துறையினர் வருவார்கள். தமிழ்நாட்டில் நிம்மதியாக தொழில் நிறுவனத்தை நடத்தலாம் என்ற நம்பிக்கை தொழிலதிபர்களுக்கு வந்திருக்கிறது. அதன் அடையாளமாகத்தான், ஏராளமான தொழிற்சாலைகள் கடந்த மூன்றாண்டுகளாக தமிழ்நாட்டில் உருவாகி வருகிறது.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி. உங்களுக்கு என் அன்பான வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் தொழில் நிறுவனங்களை தொடங்கினால் மட்டும் போதாது; உங்களை போன்று இருக்கின்ற மற்ற தொழில் நிறுவனங்களையும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வாருங்கள், தொழில் தொடங்க வையுங்கள். தமிழ்நாடு அரசின் தொழில்துறை தூதுவர்களாக நீங்கள் எல்லோரும் மாற வேண்டும்.

நாங்கள் ஆட்சி பொறுப்பேற்று, இந்த 3 ஆண்டுகளில், எண்ணற்ற தொழில் திட்டங்களை தமிழ்நாடு ஈர்த்திருக்கிறது. அதிக முதலீடுகளை ஈர்க்கும் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த தொழில்களையும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்களையும் ஈர்த்து, அதன்மூலமாக, 2030ம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற தமிழ்நாட்டின் இலக்கை அடைவதற்காக நம்முடைய அரசு முனைப்போடு செயலாற்றி வருகிறது. இந்த இருமுனை முயற்சி, இப்போது சாதகமான பலன்களை தந்து வருகிறது. இன்றைய தினம் பல்வேறு வகையான திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறேன்.

மோட்டார் வாகனங்கள், பொது உற்பத்தி, தொழிற் பூங்காக்கள், மின்னணுவியல், மருத்துவ உபகரணங்கள், தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில்நுட்ப சேவைகள், உணவு பதப்படுத்துதல், ரசாயனங்கள், ஜவுளி மற்றும் ஆடைகள், உயிர் அறிவியல், பசுமை ஹைட்ரஜன், கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இன்றைக்கு தொடங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 803 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட இருக்கிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இதில் பெருமளவிலான வேலைவாய்ப்புகள் பெண்களுக்கானவை.

எங்கள் இளைஞர்களின் திறன்களை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று முதலீட்டாளர்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.விழாவில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் முருகானந்தம், செயின்ட் கோபைன் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் சந்தானம், ஓம்ரான் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டகுடோ இவானகா, சிஐஐ தமிழ்நாடு தலைவர் வட்ஸ்ராம், செம்ப்கார்ப் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் விபுல் துலி, கிரீன்கோ குழுமத்தின் தலைவர் மகேஷ், தொழில் துறை செயலாளர் அருண் ராய், மேலாண்மை இயக்குநர்கள் சந்தீப் நந்தூரி, விஷ்ணு மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சார்ந்த நிர்வாகிகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* மாநாடுகளை நடத்துவதை விட முதலீடுகளை ஈர்ப்பதே வெற்றி’

கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினோம். மாநாடுகளை நடத்துவதைவிட, அந்த மாநாடுகள் மூலமாக எவ்வளவு முதலீடுகளை ஈர்த்தோம் என்பதில்தான், வெற்றி அடங்கியிருக்கிறது. அந்த மாநாடு மூலமாக நாம் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை – 631. ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் மதிப்பு ரூ.6.64 லட்சம் கோடி. இதன்மூலமாக 14 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 12 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். மொத்தமாக சொல்ல வேண்டும் என்றால், கடந்த மூன்று ஆண்டுகளில், 31 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், ரூ.9 லட்சத்து 74 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவதோடு நம்முடைய கடமை முடிந்துவிட்டது என்று இருந்துவிடாமல், அந்த தொழில்களை நிறுவுவதற்கு தேவையான ஆதரவு சேவைகளை அளித்துக் கொண்டு வருகின்றோம். அதன் முன்னேற்றத்தையும் தொடர்ந்து கண்காணித்து, அந்த திட்டங்கள் விரைந்து செயலாக்கப்படுவதை நம்முடைய அரசு உறுதி செய்து கொண்டிருக்கிறது. இதை ஏதோ கடமையாக மட்டும் கருதாமல், தன்னார்வத்துடன் செயல்படுத்தி காட்டி வரும் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கும், தொழில் துறை அதிகாரிகளுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

* தமிழகத்தில் பெண்களுக்கு அதிகளவு வேலைவாய்ப்பு

தமிழ்நாடு முழுவதும் பரவலான மற்றும் நிலைக்கத்தக்க வளர்ச்சியை உறுதி செய்வதில் தமிழக அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொழில் திட்டங்கள் தொடங்கப்படுவதால், அந்த மாவட்டங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், அந்த பகுதிகள் உறுதியாக சமூக, பொருளாதார வளர்ச்சி பெறும். திறன்மிகு தொழிலாளர்கள் உள்ள மாநிலம், இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் பெண் தொழிலாளர்கள் கொண்ட மாநிலம் என்று பல்வேறு சிறப்பம்சங்களை தமிழ்நாடு கொண்டிருக்கிறது. மாநிலத்தில் பெண்களின் கல்வியறிவும், வேலைவாய்ப்பு விகிதமும், நாட்டின் சராசரியைவிட அதிகமாக இருக்கிறது. நாட்டிலேயே பெண்களுக்கான மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று உலகம் முழுவதும் தெரியும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Related posts

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி