3வது போட்டியில் இந்தியா படுதோல்வி: ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை

கொழும்பு: இந்திய அணியுடனான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 110 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இலங்கை அணி, 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 248 ரன் குவித்தது. அவிஷ்கா பெர்னாண்டோ அதிகபட்சமாக 96 ரன் (102 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்), குசால் மெண்டிஸ் 59, பதும் நிசங்கா 45, கமிந்து மெண்டிஸ் 23* ரன் விளாசினர். இந்திய பந்துவீச்சில் ரியான் பராக் 3, சிராஜ், அக்சர், வாஷிங்டன், குல்தீப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 249 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 26.1 ஓவரில் வெறும் 138 ரன் மட்டுமே சேர்த்து பரிதாபமாக ஆல் அவுட்டானது.

கேப்டன் ரோகித் ஷர்மா 35, விராத் கோஹ்லி 20, வாஷிங்டன் சுந்தர் 30, பராக் 15 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். இலங்கை பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 5.1 ஓவரில் 27 ரன்னுக்கு 5 விக்கெட் கைப்பற்றி வெற்றிக்கு வழிவகுத்தார். மஹீஷ் தீக்‌ஷனா, ஜெப்ரி வாண்டர்சே தலா 2, அசிதா பெர்னாண்டோ 1 விக்கெட் வீழ்த்தினர். 110 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. அவிஷ்கா பெர்னாண்டோ ஆட்ட நாயகன் விருதும், துனித் வெல்லாலகே தொடர் நாயகன் விருதும் பெற்றனர். சூரியகுமார் யாதவ் தலைமையில் டி20 தொடரை 3-0 என கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்த இந்தியா, ரோகித் தலைமையில் ஒருநாள் தொடரை இழந்தது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

மத்தியப்பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!!

சென்னையில் பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைப்பு..!!

சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!