3 குழந்தைகளுக்கு அரிய, சிக்கலான அறுவை சிகிச்சை: எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை சாதனை

சென்னை: எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 3 குழந்தைகளுக்கு அரிய மற்றும் ஆபத்தான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து மருத்துவமனை நிர்வாகம் சாதனை படைத்துள்ளது. எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை 3 அரிய மற்றும் ஆபத்தான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளது. இதுதொடர்பாக, எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை இயக்குனர் ரெமா சந்திரமோகன் மற்றும் நுண்துளை மற்றும் புற்றுநோய் அறுவை நிபுணர் சங்கரபாரதி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 3 குழந்தைகளுக்கு அரிய மற்றும் ஆபத்தான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. குறிப்பாக நிவாஸ் என்ற ஒரு வயது குழந்தைக்கு கடுமையான மூச்சுத் திணறல் மற்றும் இருமல் தொடர்ந்து இருந்ததால் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர்.

அந்த சோதனையில் நெஞ்சு பகுதியில் கட்டி இருப்பது தெரிய வந்தது. 4 சென்டிமீட்டர் அளவு உள்ள இந்த கட்டி, உணவுக்குழாய் மற்றும் சுவாசக் குழாயை அழுத்திக்கொண்டு இதயத்திலிருந்து வரும் பெரிய ரத்த நாளமான மகாதமனி அருகில் இருந்தது. மூன்று மில்லி மீட்டர் அளவே கொண்ட இயந்திரங்கள் மூலம், விஏடிஎஸ்-கீஹோல் அறுவை சிகிச்சை செய்து மிகவும் சிக்கலான இடத்தில் இருக்கும் இந்த கட்டியை வெற்றிகரமாக அகற்றப்பட்டது. அதேபோல், 5 வயதுள்ள வெங்கட் என்ற குழந்தைக்கு வயிற்றில் மிகப்பெரிய கட்டி இருந்தது. அந்த 15 சென்டி மீட்டர் கட்டி.

மிகவும் சிக்கலாக வலது காலுக்கு செல்லும் முக்கிய ரத்தக் குழாயை அழுத்திக் கொண்டும் இடுப்பு எலும்புடன் ஒட்டிக் கொண்டும் இருந்தது. இதனால் அறுவை சிகிச்சை செய்ய எந்த மருத்துவமனையும் முன்வரவில்லை. இறுதியாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் புற்றுநோய் கட்டி என தெரியவந்தது. சுமார் ஒரு கிலோ எடையுள்ள அந்த கட்டியை மருத்துவ குழுவினர் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. மேலும் அரிய வகை வில்சன் நோயால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவன் ரித்திக், உடலில் செம்பு அதிகம் சேரும் மரபணுக் கோளாறால், 6 மாதங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தார். அதனை தொடர்ந்து மூச்சுத் திணறலுடன் மருத்துவமனைக்கு வந்தார்.

சி.டி ஸ்கேன் செய்ததில், அவரது வலது பக்கத்தில் உள்ள உதரவிதானம் பலவீனமடைந்து, துளை ஏற்பட்டு வயிற்றில் உள்ள குடல், நெஞ்சறை உள் நுழைந்து நுரையீரலை அழுத்திக் கொண்டு இருப்பது தெரியவந்தது. நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் அந்த குழந்தைக்கு குடல் ஏற்றம் சரி செய்யப்பட்டு உதரவிதானம் வலுவாக்கப்பட்டது. இந்த 3 அறுவை சிகிச்சைகளும் மிகவும் சவாலானது. தனியார் மருத்துவமனைகளில் 5 லட்சம் வரை செலவாகும் இந்த அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்யப்பட்டது. மீண்டும் அந்த குழந்தைகளுக்கு கட்டி வருவதற்கான வாய்ப்பு முகவும் குறைவு தான். தற்போது 3 குழந்தைகளும் நலமுடன் இருக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related posts

காந்தி, நேதாஜி சிலை பீடங்களில் பராமரிப்பு பணி நகர்மன்றத்தலைவர் தகவல்

ஆறுகளில் குளிப்பவர்களுக்கு ‘அலார்ட்’

தூய்மையே சேவை பணி