இதையடுத்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 231 பயணிகளுடன் நேற்று காலை 10.25 மணிக்கு வந்த மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையில் தரையிறங்காமல் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதேபோல் சிங்கப்பூரில் இருந்து 188 பயணிகளுடன் காலை 10.35 மணிக்கு வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானமும் பெங்களூருவுக்கும், டெல்லியில் இருந்து 167 பயணிகளுடன் மதியம் 12.30 மணிக்கு வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம் கோவைக்கும் திருப்பி அனுப்பப்பட்டன. மேலும் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 1.20 மணிக்கு பெங்களூரு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், 1.25 மணிக்கு கோவை செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், 12.05 மணிக்கு மும்பையில் இருந்து சென்னை வர வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஆகிய 3 விமானங்கள் சென்னை ஏர் ஷோ பாதுகாப்பு காரணமாக நேற்று ரத்து செய்யப்பட்டன. கொல்கத்தா, கவுகாத்தி, அந்தமான், ஜெய்ப்பூர், மைசூர், கோவை, டெல்லி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 10 வருகை விமானங்கள், விசாகப்பட்டினம், அந்தமான், கொல்கத்தா, திருச்சி, டெல்லி, அகமதாபாத், கோவா உள்ளிட்ட 9 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 19 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.