பெ.நா.பாளையம்: கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள சாமநாயக்கன்பாளையம் கக்கராயன் மலைப்பகுதியில் பாறை குழிகள் உள்ளன. இங்கு மழை காலங்களில் தேங்கும் தண்ணீர் குளம் போல் சேறும், சகதியுமாக இருக்கும். நேற்று முன்தினம் சிலர் இந்த தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்தனர். இதில் கோட்டைபாளையத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் நித்திஷ் (16), கல்லூரி மாணவர் வினு (19) ஆகியோர் தண்ணீரில் மூழ்கி மாயமாகினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் தேடி இருவரையும் சடலமாக மீட்டனர். அப்போது நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரும் 11ம் வகுப்பு படிக்கும் தங்கள் மகன் நித்யானந்தனை (16) காணவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து நித்யானந்தனை தேடும் பணி இரவு 9 மணி வரை நடைபெற்றது. வெளிச்சம் இல்லாததால் இப்பணி நிறுத்தப்பட்டு நேற்று காலை 6 மணிக்கு மீண்டும் தொடங்கப்பட்டது. நீண்ட நேரம் தேடிய பின் மாணவன் நித்யானந்தன் சடலமாக மீட்கப்பட்டார்.