திருவனந்தபுரம்: வேலை தேடி இந்தியாவுக்கு வந்த வங்கதேசத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் உள்பட பல இளம்பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய பெங்களூரு மற்றும் கொச்சியை சேர்ந்த இரண்டு பெண்கள் உள்பட 3 பேரை கொச்சி போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் செரீனா. கடந்த சில தினங்களுக்கு முன் இவர் கேரள மாநிலம் கொச்சி எளமக்கரை போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தன்னுடைய உறவினரான ஒரு இளம்பெண்ணுடன் கொச்சிக்கு வந்ததாகவும், அவரை கொச்சியிலுள்ள ஜகிதா என்ற பெண் கடத்திச் சென்று விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.
ஜகிதாவை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதன் பின்னர் செரீனாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் இருவரது பதில்களிலும் முரண்பாடுகள் இருப்பதை அறிந்த போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் இருவரும் சேர்ந்து பெங்களூரு மற்றும் கொச்சியில் விபசாரம் நடத்தி வருவது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. செரீனா பெங்களூருவில் விபசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் வேலை தேடி பெங்களூரு வந்த வங்கதேசத்தை சேர்ந்த இளம்பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. தான் வேலை வாங்கித் தருவதாக கூறி அந்த இளம்பெண்ணை செரீனா விபசாரத்தில் தள்ளினார்.
இந்நிலையில் கொச்சியில் விபசாரம் செய்து வரும் ஜகிதா என்ற பெண்ணுடன் செரீனாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் இளம்பெண்களை விபசாரத்திற்காக கொச்சியிலிருந்து பெங்களூருக்கும், பெங்களூருவிலிருந்து கொச்சிக்கும் அனுப்பி வைத்து வந்துள்ளனர். இதே போலத்தான் வங்கதேச இளம்பெண்ணையும் ஜகிதாவிடம் செரீனா அனுப்பி வைத்துள்ளார். ஒரு மாதத்திற்குள் அவரை திருப்பி அனுப்ப வேண்டும் என்று செரீனா கூறியிருந்தார். ஆனால் ஜகிதா அந்த இளம்பெண்ணை திருப்பி அனுப்பவில்லை.
கூறியபடி கமிஷனும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தான் செரீனா போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக முதலில் செரீனாவை கைது செய்த போலீசார், பின்னர் ஜகிதா மற்றும் அவருடன் சேர்ந்து விபசாரம் நடத்திய எர்ணாகுளத்தை சேர்ந்த விபின் என்பவரையும் கைது செய்தனர். தொடர்ந்து இந்த கும்பலிடமிருந்து வங்கதேச இளம்பெண்ணை மீட்ட போலீசார் அவரை கொச்சியிலுள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.