பொன்னேரி: பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்(26). பொன்னேரி காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி. இதேபோன்று, மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி விஷ்ணு. இருவரும் நண்பர்கள். இதனால் லட்சுமணன் வீட்டிற்கு விஷ்ணு அவ்வப்போது வந்து சென்றுள்ளார். அப்போது, லட்சுமணனின் மனைவி ரம்யாவுடன் விஷ்ணுவுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலர்களாக மாறி அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இது லட்சுமணனுக்கும் தெரியவந்ததால் இருவரையும் கண்டித்துள்ளார். நேற்றுமுன்தினம் லட்சுமணனுக்கும் மனைவி ரம்யாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர், உனது கள்ளக்காதலனை கொலை செய்ய போகிறேன் என கூறிவிட்டு புறப்பட்டுள்ளார். உடனே விஷ்ணுவுக்கு போன் செய்த ரம்யா தகவல் கொடுத்துவிட்டார். இந்நிலையில் தோட்டக்காடுக்கு சென்ற லட்சுமணன் விஷ்ணுவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த விஷ்ணு மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து, லட்சுமணனை கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கொலையில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதில், காணியம்பாக்கம் தொப்பு காலணியை சேர்ந்த சாது(22), தோட்டகாடு மோட்டு காலணி ஹரிஸ்(20), வெள்ளம்பாக்கத்தை சேர்ந்த கார்த்தி(20) ஆகிய மூன்று பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
இதில், முக்கிய குற்றவாளியான விஷ்ணு மற்றும் அவரது நண்பர் விஷால் ஆகியோரை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.