.37 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை

தர்மபுரி, ஆக.18: தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் 6.37 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமை, கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.
தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, குழந்தைகளுக்கு அல்பெண்டாசோல் மாத்திரை வழங்கும் முகாம் நேற்று துவங்கியது. குழந்தைகள் சாப்பிடுகின்ற உணவில் உள்ள சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு முழுமையாக கிடைப்பதற்கு ஏதுவாக, குடலில் உள்ள புழுக்களை அழிப்பதற்காக இம்மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகையை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சுறுசுறுப்பாக இருக்கவும், அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த முகாம்களில் குடற்புழுவை அழிக்கும் பொருட்டு, அல்பெண்டாசோல் மாத்திரைகள் 1 முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 200 மில்லி கிராம் அளவிலும், 2 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு 400 மில்லி கிராம் அளவிலும், 20 வயது முதல் 30வயது வரை உள்ள பெண்களுக்கு 400 மில்லி கிராம் அளவில் ஒரே தவணையில் வழங்கப்படுகிறது.

தர்மபுரி மாவட்டம், சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப்பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் சாந்தி முகாமை தொடங்கி வைத்தார். பின்னர், பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். இதில் தேசிய குடற்புழு நீக்க தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இது குறித்து கலெக்டர் சாந்தி கூறியதாவது: தேசிய குடற்புழு நீக்க தின முகாமையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் 1333 அங்கன்வாடி மையங்களில், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், 225 துணை சுகாதார நிலையங்கள், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்வி நிறுவனங்களிலும் பயிலும் மாணவர்களுக்கும், அல்பெண்டாசோல் மாத்திரைகள் மொத்தமாக 6,37,352 பயனாளிகளுக்கு 1741 பணியாளர்களை கொண்டு வழங்கப்பட்டது. குடற்புழு தொற்றை தடுக்க திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்பது, கழிவறையை பயன்படுத்துவது, வெளியில் செல்லும் போது காலணிகளை அணிந்து செல்வது, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது, காய்கறி பழங்களை நன்றாக கழுவிய பின் உட்கொள்வது, சுகாதாரமான குடிநீர், உணவை உட்கொள்வது, உணவுக்கு முன் கழிவறைக்கு சென்று விட்டு வந்த பின், கைகளை சோப்பு போட்டு கழுவுவது போன்ற முறைகளை மேற்கொள்வதன் மூலம் தடுக்கலாம்.

மாவட்டத்தில் தகுதியுள்ள அனைத்து குழந்தைகளுக்கும், குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்வதற்கு ஊக்குவிக்கவும், மாத்திரையின் பயன், வழங்கப்படும் நாள் குறித்து பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எடுத்துக்கூறி, இத்திட்டம் சிறப்பாக நடைபெற தொடர்புடைய அனைத்து துறை பணியாளர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றுகிறார்கள். விடுபட்ட குழந்தைகளுக்கு வரும் 24ம் தேதி ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் மாத்திரை வழங்கப்படும். முகாமில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜெயந்தி, வட்டார மருத்துவ அலுவலர் தனசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார், சோலைக்கொட்டாய் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தேவி, தலைமையாசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவிகள், சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை